திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு - இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றும் இன்று தீர்ப்பளிக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, அப்போது வீட்டு வசதி வாரிய வீடு ஒன்றை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளிக்கவுள்ளார்.

இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day