எழுத்தின் அளவு: அ+ அ- அ
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே நீடித்த பிரச்சனை மத்தியஸ்தர் பேச்சுவார்த்தையில் சமசரம் ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் விளக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை தொடங்கி இருப்பதாக கூறி பெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி பெப்சி கடிதம் அனுப்பி இருந்தது. இதனால் படப்பிடிப்பு மற்றும் படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு சங்கங்கள் இடையேயான பிரச்னையை தீர்ப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நியமித்து பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி தன்பால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும், பெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.