சென்னை : நடைப்பயிற்சி சென்ற தம்பதியினரை நாய் கடித்து குதறியதால் பரபரப்பு - பொதுமக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சூளைமேடு பகுதியில் நடைப்பயிற்சி சென்ற தம்பதியினரை நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடரும் நாய்க்கடி சம்பவங்களால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். 

சென்னை சூளைமேடு சர்புதீன் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மனைவி நீலா உடன் வீட்டின் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவர், வளர்த்து வரும் தெரு நாய் ஒன்று நீலாவின் தொடையில் கடித்தது. இதனை கண்டு பதறிய சுரேஷ் நாயை விரட்ட முயன்றபோது அவரையும் காலில் கடித்துள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, நீலா அளித்த புகாரின்பேரில், தெரு நாயை வளர்த்து வரும் மல்லிகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 5ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. இதில், படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆலந்தூரில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனையும், காவலர் ஒருவரின் வளர்ப்பு நாய் கடித்தது. இந்த சம்பவங்களின் பரபரப்பு அடங்குவதற்குள், சூளைமேடு பகுதியில் நடைப்பயிற்சி சென்ற தம்பதியினரை வளர்ப்பு தெரு நாய் கடித்து குதறியது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day