எழுத்தின் அளவு: அ+ அ- அ
2 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகிறார். அதனால், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2 நாள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். தொடர்ந்து, இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை விமானம் மூலம் திருச்சி செல்லும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்லும் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளவுள்ளார். சாமி தரிசனத்திற்கு பின் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.