எழுத்தின் அளவு: அ+ அ- அ
கச்சத்தீவு இந்திய மண்ணிற்கு சொந்தமானது என்றும், அதனை இலங்கைக்கு தாரைவார்த்தது செல்லாது என்றும் உறுதிபடத் தெரிவித்து, கச்சத்தீவை மீட்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டவர் புரட்சித்தலைவி அம்மா. இதனை நிறைவேற்றுவதற்காக, ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத போதும் அயராத முயற்சிகளை மேற்கொண்டார் புரட்சித்தலைவி அம்மா.
1991ம் ஆண்டு, தமிழகத்தில் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற புரட்சித்தலைவி அம்மா, அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து உரையாற்றியபோதே, இந்திய மண்ணுக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்போம் என்று உறுதிபட முழங்கினார். இதனையடுத்து, இதற்கான அம்மாவின் நடவடிக்கைகள் தொடர்ந்தன.
இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு கச்சத்தீவை ஒருதலைப்பட்சமாக தாரை வார்த்த ஒப்பந்தம் செல்லாது என்றும், அதனை ரத்து செய்யவேண்டும் கோரி, கடந்த 2008ம் ஆண்டு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் புரட்சித்தலைவி அம்மா.
இதன் தொடர் நடவடிக்கையாக, கச்சத்தீவின் பாரம்பரிய வரலாறு மற்றும் பல்வேறு குறிப்புகளை தன்வசம் வைத்திருக்கும் தமிழக வருவாய்த்துறையும் இவ்வழக்கில் இணையவேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த 2011ம் ஆண்டு ஜுன் மாதம் 9ம் தேதி இதற்கான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார் புரட்சித்தலைவி அம்மா. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய புரட்சித்தலைவி அம்மா, கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பதிலுரை ஆற்றிய புரட்சித்தலைவி அம்மா, கச்சத்தீவின் மிக நீண்டகால வரலாறு, அது எந்த வகையில் இந்திய மண்ணிற்குச் சொந்தமானது, அதனை தன்னிச்சையாக இலங்கையிடம் ஒப்படைத்தது எவ்வளவு பெரிய தவறு? என்ற விவரங்களை விளக்கமாக எடுத்துக்கூறினார். குறிப்பாக கச்சத்தீவு ஒப்பந்தம் 1974ம் ஆண்டு ஏற்பட்டபோது, அன்று தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி, கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட எவ்வாறு உடந்தையாக இருந்தார் என்பதையும், அவர் நினைத்திருந்தால், உச்சநீதிமன்றம் மூலம் அதனை அப்போதே ரத்து செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். இதன்மூலம் காங்கிரசும் திமுக-வும் சேர்ந்துதான் கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைத்தன என்ற உண்மையை புரட்சித்தலைவி அம்மா தெள்ளத்தெளிவாக அம்பலப்படுத்தினார்.
கச்சத்தீவை மீட்க, தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த புரட்சித்தலைவி அம்மா, அதுதொடர்பாக 2016ம் ஆண்டு ஜுன் மாதம் 20ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் எழுந்த விவாதத்தின்போது, திமுகவினர் செயல்படவேண்டிய நேரத்தில் எதுவும் செய்யாமல், கச்சத்தீவு ஒப்பந்தத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் பிரச்சனையாக்குவதாக குற்றம் சாட்டினார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, சிறைபிடிக்கப்படுவது ஆகிய அத்தனைக்கும் காரணம் திமுக-தான் என்றும், தமிழக மீனவர்கள் படும் இன்னல்களுக்கு எல்லாம் திமுகவினர்தான் மூல காரணம் என்றும் ஆதாரங்களுடன் புரட்சித்தலைவி அம்மா எடுத்துரைத்தார்.
2016ம் ஆண்டு ஜுன் மாதம் 20ம் தேதி, கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் புரட்சித்தலைவி அம்மா பல்வேறு விளக்கங்கள் அளித்த நிலையில், அடுத்த நாள், திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்கு வெளியே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து, ஜுன் 23ம் தேதி சட்டப்பேரவையில் உரையாற்றிய புரட்சித்தலைவி அம்மா, முன்னுக்குப்பின் முரணான பல தகவல்கள் கருணாநிதி அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினார். சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் அவைக்கு வந்து பேசுவதற்கு எல்லா உரிமைகளும் பெற்ற கருணாநிதி, அதனை செய்யாமல், அவைக்கு வெளியே அறிக்கை வெளியிட்டது ஏன்? என்று புரட்சித்தலைவி அம்மா கேள்வி எழுப்பினார். கருணாநிதியின் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பல முரண்பட்ட தகவல்களை, உண்மைக்குப் புறம்பான செய்திகளை புரட்சித்தலைவி அம்மா சுட்டிக்காட்டி, கேள்வி எழுப்பியபோது திமுக உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த புரட்சித்தலைவி அம்மா, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததில் திமுகவுக்கு பங்கு இருப்பதை கருணாநிதியின் அறிக்கையே தெளிவுபடுத்துவதாக ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.