எழுத்தின் அளவு: அ+ அ- அ
தனது மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு பாமக தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவருக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், அது டிராவில் முடிந்ததாக ராமதாஸ் கூறினார். இதன்பின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் எல்லாமே அன்புமணிக்கு கொடுக்கப்படும் என்றும், அதுவரை தானே கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பேன் என்றும் கூறினார்.
இந்தநிலையில் தைலாபுரத்தில் இன்று ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என்று நினைத்ததாக தெரிவித்தார். அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும் போது, தனக்கு மனக்குமுறலும், மன அழுத்தமும் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது மூச்சு அடங்கும் வரை பாமகவிற்கு தானே தலைவராக இருப்பதாகவும், தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், மாமல்லபுரம் மாநாட்டுக்கு பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக போய்க் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். 100 ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறிவிட்டு, மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்துவதாகவும், தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை என்றும் அவர் வருத்தமாக கூறினார். ராமரை போல் வனவாசம் செல் என்று சொல்லவில்லை என்றும் செயல் தலைவராக இருக்கவே அன்புமணியை கூறுவதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.
இதனிடையே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை மாற்றம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக தியாகராஜன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக செந்தில்குமார், பட்டுக்கோட்டை நகர இளைஞர் சங்க செயலாளராக பெரமையன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக பிரபு ஆகியோரை நியமனம் செய்து அறிவித்துள்ளார். இந்த நிர்வாகிகள் மாற்றம் என்பது தொடர்ந்து நீடிக்கும் என கூறப்படுகிறது.