கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் தள்ளிவைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னட மொழி குறித்தான கருத்துக்கு மன்னிப்பு கேட்பதில் நடிகர் கமலுக்கு என்ன ஈகோ இருக்கிறது என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நீதிபதியின் சரமாரி கேள்வியை தொடர்ந்து கர்நாடகாவில் தக் லைப் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல், தமிழில் இருந்துதான் கன்னடம் மொழி தோன்றியதாக பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்த கர்நாடக அரசியல் வாதிகளும், கன்னட மொழி ஆர்வலர்களும், இத்தகைய பேச்சுக்கு நடிகர் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர். ஆனால் நடிகர் கமல் மன்னிப்பு கோராததால் தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாநில திரைத்துறை வர்த்தக சபை முடிவு செய்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல் தொடர்ந்த வழக்கு நீதிபதி நாகபிரசன்னா முன் வந்தது. 

அப்போது, கமலஹாசனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி மக்களின் மனதை புண்படுத்தக் கூடாது எனவும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் நீதிபதி நாகபிரசன்னா கூறினார். 

கன்னடம் குறித்து பேசிய கமல் என்ன வரலாற்று ஆய்வாளரா என கேள்வி எழுப்பிய நீதிபதி, கமல் பேச்சால் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

கமல் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்து இருக்கும் எனவும், கமல் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் மன்னிப்பு கேட்க மதியம் 2.30 மணி வரை கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

பின்னர் 2.30 மணிக்கு மீண்டும் இவ்வழக்கு விசாரணையின்போது கர்நாடகா பிலிம் சேம்பருக்கு கமல் அளித்த கடிதம் குறித்து நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. 

அப்போது மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ இருக்கிறது என கேள்வி எழுப்பிய நீதிபதி, கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம் எனவும், ஆனால், அவர் அளித்த கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை என்றும் மன்னிப்பு கேட்க சொன்னால் ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறீர்கள் எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க முடியும் எனக்கூறிய கமல் தரப்பு வழக்கறிஞர், தவறாக புரிந்து கொண்டால் எப்படி மன்னிப்பு கேட்பது என்று கூறினார். மேலும், கர்நாடகாவில் தக் லைப் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கர்நாடக பிலிம் சேம்பருடன் கமல் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, உடன்பாடு ஏற்படும் வரை கர்நாடகாவில் படம் வெளியிடப்படாது என ஆணையிட்டு வழக்கை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Night
Day