நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து தினேஷ் மாஸ்டர் விலகும் வரை சட்டப் போராட்டம் தொடரும் - கல்யாண் மாஸ்டர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடன கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய தினேஷ் மாஸ்டரை நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பதிவியிலிருந்து வெளியேறும் வரை சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக துணை தலைவர் கல்யாண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த லியோ படத்தில் குரூப் டான்ஸ் ஆடிய 1000 நடன கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என்றும், அதில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அடுக்காக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதேபோல் மாரி என்பவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து நடன சங்கத்தின் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்த டான்ஸ் மாஸ்டர் கௌரி சங்கர் மற்றும் அவரது குழுவினரை தினேஷ் மாஸ்டர் மற்றும் அவரோடு இருந்தவர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்னை சங்கத்தின் துணை தலைவரான கல்யாண் மாஸ்டரிடம் வந்தது. அப்போது தினேஷ் மாஸ்டர் தன்மீது தான் தவறு உள்ளதாகவும், தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவசர பொதுக்குழு கூட்டம் கூட்டி தினேஷ் மாஸ்டர் பதவி விலக வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்கான முறையான படிவத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார். தலைவர் பதவியில் விலகுவதாக ஒப்புக்கொண்ட தினேஷ் மாஸ்டர் மறுத்ததால் தினேஷ் மாஸ்டர் தரப்பினருக்கும், கல்யாண மாஸ்டர் தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட கல்யாண மாஸ்டர் தரப்பினர் சங்கத்தின் வாயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day