எழுத்தின் அளவு: அ+ அ- அ
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. அதிகபட்சமாக குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்கள் பொள்ளாச்சி டவுன் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கும் அதன்பின் சிபிஐக்கும் மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு, ஹேரேன் பால், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள்கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிர்தல் உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் சாட்சிகள் விசாரணை, அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதிவாதம் முடிவடைந்து மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கைதான 9 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதி நந்தினி தேவி, கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். பின்னர் தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, அதிகபட்சமாக குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்தண்டனை விதித்து அறிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு கோவை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தண்டனையையும் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.