நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணமல்போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மாவட்ட எஸ்.பி.யிடம் ஜெயக்குமார் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகிப்பவர் கேபிகே ஜெயக்குமார். இவர் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில், ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கேபிகே ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். ஜெயக்குமார் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், திசையவிளை அருகே கரைசுத்து புதூர் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் மாவட்ட நிர்வாகியாக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பது நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக கடந்த மாதம் 30ம் தேதி ஜெயக்குமார் தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டுக் கொண்டு இருப்பதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் குறிப்பிட்டு மாவட்ட எஸ்.பி.க்கு ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day