எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த 4ம் தேதி அவரது வீட்டருகே உள்ள தோட்டத்தில், எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து, இவரது மர்ம மரணம் வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் போலீசார் விழிப்பிதுங்கி வந்தனர். 20 நாட்களாகியும் துப்பு துலங்காததால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கரைச்சுத்து புதூர் விரைந்துள்ளனர். ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலம் படி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு உட்பட 32 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகரின் பெயரும் இருப்பது தொடர்பாக அரசிடம் அனுமதி பெற்று, அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.