எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தியது தான் அல்ல என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி முனீா் உடனான சந்திப்பை கெளரவமாக கருதுவதாக தெரிவித்தார். இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுடனும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். இரு நாட்டுத் தலைவர்களும், அங்குள்ள அதிகாரிகளும் திறமையானவர்களாக உள்ளதாகவும், அதன் காரணமாகவே சண்டையை மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று தீா்மானிக்க முடிந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இல்லையெனில், சண்டை அணு ஆயுதப் போராக மாறியிருக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டார். சண்டையை நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் தீா்மானித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக டிரம்ப் கூறினார்.
பஹல்காம் சம்பவத்தையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதல் போராக தொடரும் சூழல் நிலவியதால் சர்வதேச அளவில் பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் தெரிவித்ததையடுத்து இந்தியாவும் தாக்குதலை நிறுத்தியது. இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளிடையே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக போர் நிறுத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்த தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தையே காரணம் என டிரம்ப் தொடர்ந்து பேசி வந்தார். இந்நிலையில், இருநாடுகளுக்கும் சண்டையை நிறுத்தியது தான் அல்ல என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், தனது கருத்தால் எழுந்த சர்ச்சைகளுக்கு தானே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.