எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 62 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டு நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிலிப்பைன்ஸின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரை மையமாக கொண்டு ரிக்டர் அளவில் 6.9 ஆக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 74 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.