"மீண்டும் தாக்கினால் பதிலடி பலமாக இருக்கும்" - ஐ.நா.வுக்கு ஈரான் கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி ஈரான் அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானிய தாக்குதல்களுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இதனால் கோபமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவி வந்தது. 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது. அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் தாக்குதலை தொடர்ந்து அவசரமாக அமைச்சரவையை கூட்டிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் ஈரான் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. அவசர கூட்டத்திற்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.

ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள முழு பலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு துறை செய்தித்தொடர்பாளர் டேனியல், இஸ்ரேல் மண்ணையும், மக்களையும் காப்பாற்றுவதே நோக்கம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தாக்குதலில் இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், பெரிய அளவில் சேதம் என ஈரானும் கூறியுள்ளன. அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், லெபனான் தங்களது வான் பரப்பை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன. 

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குபின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரானிய தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலுக்கு "இரும்புக் கவச" ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார். அதேநேரம், ஈரான் மீதான இஸ்ரேலின் எதிர்தாக்குதலை அமெரிக்கா ஆதரிக்காது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக அந்நாட்டு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பைடனின் பலவீனமான செயல்பாடே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த காரணம் என அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஈரானின் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் உடன் பிரிட்டன் துணை நிற்கும் எனவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதலுக்கு ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் மறு உத்தரவு வரும் வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை தத்தமது நாட்டு மக்களுக்கு விடுத்துள்ளன.

Night
Day