சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பொதுவாக ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. இந்தநிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே 1-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் கடந்த 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் மற்றும் 1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் கீழ் நடத்தப்பட உள்ளது. ஆனாலும், பனிப்பொழிவு நிறைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் வரும் அக்டோபரிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது.
அதன்படி, நாடு முழுவதும் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், கணக்கெடுப்புக்கு தேவையான ஆவணங்கள், விண்ணப்பங்கள், கையடக்க டிஜிட்டல் இயந்திரங்கள் உள்ளிட்டவை விரைவில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு அது தொடர்பான பயிற்சி அளிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்தமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் முதல்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் கேட்கப்படும் நீண்ட கேள்விகளின் பட்டியலில், சாதி மற்றும் துணை சாதிகள் பற்றிய கேள்விகளும் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.