சவுதி அரேபியாவிலிருந்து ஹஜ் யாத்ரீகர்களுடன் வந்த விமானம் லக்னோவில் தரையிறங்கும் போது கடுமையான புகை மற்றும் தீப்பொறி கிளம்பியதால் பதற்றம் நிலவியது.
250 ஹஜ் யாத்ரீகர்களுடன் சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு 10:45 மணிக்கு ஜெட்டாவிலிருந்து புறப்பட்டு இன்று லக்னோவுக்கு வந்தடைந்தது. சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. விமானத்தின் சக்கரத்திலிருந்து புகையும் தீப்பொறிகளும் வெளிப்பட்டன. இதையடுத்து விமானி விரைவாகச் செயல்பட்டு விமானத்தை நிறுத்தினார்.
தீயணைப்பு உள்ளிட்ட அவசர வாகனங்கள் உடனடியாக விமானத்தை சூழ்ந்த நிலையில் 20 நிமிடங்களுக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விமானத்தில் இருந்த 250 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் லக்னோ விமான நிலையில் பரபரப்பு நிலவியது.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தொடர்ச்சியான விபத்துக்கள், விமானப் பாதுகாப்பு மற்றும் விமான பராமரிப்பு நெறிமுறைகளின் செயல்திறன் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.