எழுத்தின் அளவு: அ+ அ- அ
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விளம்பர திமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மதுரை மீனாட்சி அம்மன், சொக்கநாதர், கள்ளழகர், திருப்பரங்குன்றம் முருகனை வணங்கி உரையைத் தொடங்குவதாக கூறினார். தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லை என்ற வருத்தம் இருப்பதாக கூறிய அமித் ஷா, மாற்றங்களுக்கான மண், மதுரை என்று தெரிவித்தார். அமித் ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என முதலமைச்சர் கூறுவதாக குறிப்பிட்ட அவர், ஆனால் தமிழக மக்கள் அவர்களை தோற்கடிக்க தயாராக இருப்பதாக கூறினார். மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்ததால் கூறுகிறேன், வரும் தேர்தலில் திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
வரும் 22ம் தேதி மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் விளம்பர திமுக அரசு ஊழலில் திளைத்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய அவர், விளம்பர திமுக அரசு நூற்றுக்கு நூறு சதவீதம் தோல்வி அடைந்த ஆட்சி என்றும் அவர் கடுமையாக சாடினார். தமிழகத்தில் விலைவாசி உயர்வாலும், வாழ்வாதார அச்சத்தாலும் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், திமுக ஆட்சியை அகற்றுவதே இலக்கு என்றும் அவர் கூறினார். டாஸ்மாக்கில் 35 ஆயிரத்து 775 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய அமித் ஷா, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார்.
இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முப்படைகள் உதவியோடு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்ததாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். கடந்த 11 ஆண்டு கால பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்றுள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.