பெங்களூரு குண்டுவெடிப்பு - உணவகத்தில் இன்றும் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூர் குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சி மற்றும் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் முதலமைச்சர் சித்தராமையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒயிட் பீல்ட் பகுதியில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவு கடையில், நேற்று முன்தினம் மர்மமான முறையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெங்களூரு மாவட்ட மாநகர காவல் ஆணையர் தயானந்தா குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து என்ஐஏ மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த உணவகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சி மற்றும் புகைப்படத்தை காவல்துறை நேற்று வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெடிகுண்டு வெடித்த உணவகத்தில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் மாநில தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே, சம்பவ இடத்தில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

இதனிடையே, பெங்களூரு வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்தவும் சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் எல்லைகளிலும் கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டு, அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பிறகே அனுப்பவும் தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

Night
Day