குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலம் நிர்ணயம் செய்த தீர்ப்பு மீது குடியரசு தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களில் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து உத்தரவிட்டது. இவ்வாறு நீதித்துறை உத்தரவிட முடியுமா? என விளக்கம் கேட்டு 14 கேள்விகள் அடங்கிய குறிப்பினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். இதனை வழக்காக ஏற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசும், கேரளா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவாகவும் வாதங்களை முன்வைத்தன. கடந்த செப்டம்பர் 11ம் தேதி வழக்கின் விசாரணையை முடித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

வரும் 23ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கு, முந்தைய தீர்ப்பை சீராய்வு செய்வதற்கானது அல்ல என்றும், மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் காலவரம்பின்றி கிடப்பில் போட்டு வைப்பதை ஏற்க முடியாது எனவும் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day