எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய்சின்னம்மா பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, புதிய தேர் வெள்ளோட்டத்தையும் புரட்சித்தாய் சின்னம்மா வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு வட்டம் காசவளநாடு கோவிலூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், சோழர் காலத்தில் கட்டப்பட்டதுமான அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலின் திருத்தேர் பழுதடைந்த காரணத்தினால் கடந்த 50- ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு இக்கோயில் மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றதை தொடர்ந்து தேரோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் மற்றும் காசவளநாட்டார்களால் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் பங்களிப்புடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தேர் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கான பணி முடிவடைந்ததை தொடர்ந்து திருத்தேர் வெள்ளோட்டம் ஜுன் 10 ஆம் தேதியான செவ்வாய் கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல்நாளான திங்கள் கிழமை மாலை 6-மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை காலை விநாயகர் பூஜையுடன் தொடங்கி மகா பூர்ணாஹூதியுடன் தீபாராதனை யாத்ர தானமுடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் நூதன ரதத்தில் கலச அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய ரதத்தில் கடம் வைத்து திருத்தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி அன்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் கிராமமக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
புரட்சித்தாய் சின்னம்மாவை கிராமத்து பெண்கள் சுற்றி வந்து பூரண கும்ப ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை அடுத்து அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள கொடிமர விநாயகரை புரட்சித்தாய் சின்னம்மா வழிபட்டார். பின்னர், அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கோவிலில் உள்ள திருஞானசம்மந்தர், வெளி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, மகா கணபதி சன்னதிகளில் புரட்சித்தாய் சின்னம்மா வழிபாடு நடத்தினார்.
அதன்பின்னர் வள்ளி சுப்பிரமணியர் தெய்வானை சன்னதியில் நடைபெற்ற மகா தீபாராதனை வழிபாட்டில் பங்கேற்ற புரட்சித்தாய் சின்னம்மா, கோயில் உள்பிரகாரத்தில் உள்ள கெஜலட்சுமி சன்னதி, விஷ்ணு துர்க்கை சன்னதி, சண்டிகேஸ்வரர், நவகிரக சன்னதி, காலபைரவர், சனீஸ்வரர், சூரிய பகவான், ஆதிபராசக்தி ஆகிய சன்னதிகளிலும் வழிபாடு நடத்தினார். பின்னர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சன்னதியில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று வழிபட்டார்.
தொடர்ந்து கொடிமரம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் - அம்பாளுக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியில் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் கோவில் விழா குழு சார்பில் புதிய தேர் பணியில் ஈடுபட்ட ஸ்தபதிக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. மேலும் புதிய தேர் பணியில் ஈடுபட்ட சிற்பிகளுக்கும், கோவில் அர்ச்சகர்களுக்கும், கோவில் பணியாளர்களுக்கும் புரட்சித்தாய் சின்னம்மா வஸ்திரங்களை வழங்கி கௌரவித்தார்.
இதனைத்தொடர்ந்து கோவில் புதிய தேர் வெள்ளோட்டத்திற்காக நாதஸ்வரம், சிவ வாத்தியம் முழங்க, கடம் புறப்பாடு உடன் புரட்சித்தாய் சின்னம்மா ஊர்வலமாக சென்றார். பின்னர், அவர் முன்னிலையில் புதிய தேருக்கு நூதன ரதத்தில் கலச அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து புதிய ரதத்தில் கடம் வைத்து திருத்தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அஇஅதிமுக பொதுச்சயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று 12 அடி உயர திருத்தேரின் வெள்ளோட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் இணைந்து புரட்சித்தாய் சின்னம்மா, வடம் பிடித்து இழுக்க புதிய தேர் வெள்ளோட்டம் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து புதிய தேர் வெள்ளோட்டம் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. பல ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதன்பின்னர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, காசவள நாட்டார்கள் சார்பில் மகாபாரத புராணத்தில் போருக்குச் செல்லும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் தேரோட்டிச் செல்லும் காட்சியை நினைவுபடுத்தும் வகையில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பிள்ளையார் திருவுருவ சிலையும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் புரட்சித்தாய் சின்னம்மா அங்கிருந்து காரில் புறப்பட்டபோது அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அங்கிருந்த ஏராளமான குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகளை வழங்கி நலம் விசாரித்து பின்னர் தஞ்சைக்கு புறப்பட்டார்.
தேர் வெள்ளோட்டத்தினை தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை காசவளநாட்டைச் சேர்ந்த 18 கிராமத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் இணைந்து செய்தனர்.