விளம்பர திமுக அரசின் மாநில சுயாட்சி நாடகம்... 2026 தேர்தலுக்கான பொலிட்டிகல் ஸ்டண்ட்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மாநில உரிமைகளை காப்பதன் தேவை குறித்தும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் சட்டப்பேரவையில் வாய் கிழிய பேசி, மாநில சுயாட்சி குறித்த தீர்மானத்தை விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றியிருப்பது 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டிய திமுகவின் வெற்று POLITICAL STUNT என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் மத்திய - மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது விளம்பர திமுக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு.

இதுகுறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய விளம்பர முதலமைச்சர், மாநிலங்களுக்கு சுயாட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு குழுவை அமைப்பதாகவும் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே எந்த மாநிலமும் இதுகுறித்து முயற்சிகள் எடுக்காத நிலையில், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே, 1969-ம் ஆண்டு மத்திய-மாநில அதிகாரப் பங்கீட்டை ஆய்வு செய்வது குறித்து ராஜமன்னார் குழுவை கருணாநிதி அமைத்ததாகவும் பெருமை பேசி மார்த்தட்டிக்கொண்டார் விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின். 

தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, நிதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மாநிலத்தின் உரிமை மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்டெடுக்கும் முயற்சியாகவே மாநில சுயாட்சி தீர்மானம் எனவும் விளம்பர திமுக அரசு கதையளந்து வருகிறது. இந்தநிலையில் மாநில சுயாட்சி குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டிய திமுகவின் வெற்று POLITICAL STUNT என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 

விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது போல அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பாகவே சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பி.வி.ராஜமன்னார் தலைமையில் கருணாநிதியால் அமைக்கப்பட்ட  ராஜமன்னார் குழு, தனது அறிக்கையை 1971ம் ஆண்டே வழங்கிவிட்டது. அதன் பிறகு எத்தனையோ முறை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, ராஜமன்னார் குழு பரிந்துரைக்கு ஒப்புதல் பெற்று மாநிலத்திற்கான சுயாட்சியை பெற தவறியது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 

கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலமாக கோமாவில் இருந்துவிட்டு தற்போது ஆட்சி முடியப்போகும் தருவாயில் மாநில சுயாட்சி என்ற நாடகத்தை திமுக கையில் எடுத்திருப்பது முழுக்க முழுக்க சட்டமன்ற தேர்தலை மையப்படுத்திய நாடகம் என்றே விமர்சிக்கப்படுகிறது. 

இந்தியாவில் 1975 முதல் 1977ஆம் ஆண்டு வரையிலான எமர்ஜென்சி காலத்தில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில்தான், மாநில வரம்புகளில் இருந்த பல அதிகாரங்கள் மத்திய அதிகார வரம்புக்கு மாற்றப்பட்டது. அதில் மிக முக்கியமானதாக மாநில பட்டியலில் இருந்த கல்வியும் நிதி நிர்வாகமும் மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 

அதன்பிறகு தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அப்போதெல்லாம் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற எந்தவித முயற்சியும் எடுக்காமல் தற்போது மாநில சுயாட்சியை தூக்கிப்பிடித்து துள்ளி குதிப்பதை பார்க்கும் போது வேடிக்கையாகவே உள்ளது. 

கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தால் நீட் தேர்வை சுலபமாக நீக்கி இருக்க முடியும் என்ற நிலையில் அப்போதெல்லாம் ஆழ்ந்த குரட்டையில் இருந்துவிட்டு தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமன்றம், மக்கள் மன்றம், நீதிமன்றத்தின் கதவை தட்டுவோம் என விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின் வாய்சவடால் விடுவதை பார்க்கும் போது கொதிப்பையே ஏற்படுத்துகிறது.

இன்னும் சொல்லப்போனால் 50 ஆண்டுகளுக்கு பின்பு மாநில சுயாட்சி குறித்த ஞானோதயம் திமுகவுக்கு பிறந்திருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், மாநில சுயாட்சி என்ற முழக்கத்தை, அவர்கள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் கொள்கைகளில் ஒன்றாக சேர்க்காமல் போனது ஏன்? என்ற மிகப்பெரிய கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

தனது குடும்பத்தின் நலன் ஒன்றையே பிரதானமாக கொண்ட விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது தமிழக மக்களின் உரிமை மீட்டெடுக்கிறேன் என்ற பேரில் மாநில சுயாட்சி நாடகத்தை ஆடுவது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா? என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Night
Day