எழுத்தின் அளவு: அ+ அ- அ
3 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஆண்டு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்கள் அல்லாத தனியார் வாகனங்கள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட தூரம் செல்லும் வகையில் ஆண்டு முழுவதும் செல்லத்தக்க புதிய ரக fastag பாஸை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய பாஸ் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி பெறப்படும் புதிய வருடாந்திர பாஸை காட்டி 200 முறை சுங்கச் சாவடிகளை கடந்து பயணிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சரக்கு வாகனங்கள் அல்லாத தனியார் வாகனங்கள் மட்டும் 3 ஆயிரம் ரூபாய்க்கு பாஸ்டேக் பாஸ் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியநபர் வாகனங்களான கார்கள், ஜீப்கள் மற்றும் வேன்கள் சுங்கச்சாவடிகளில் தடையற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாஸ்டேக் பாஸை ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி மூலமாகவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக இணையதளம் மூலமாகவும் பெறலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஆண்டு முழுவதும் செல்லத்தக்க இந்த பாஸை பயன்படுத்தி 200 முறை சுங்கச்சாவடிகளை தனியார் வாகனங்கள் கடந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.