ஏப்ரல் 19- உலக கல்லீரல் தினம்... அரிய உறுப்பை காப்பது நம் கடமை...

எழுத்தின் அளவு: அ+ அ-

உலக அளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. ஆரோக்கியமான கல்லீரல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு கவனத்தை ஈர்க்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுகிறது. உடலின் 2வது பெரிய உறுப்பான இந்த கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்ன என்பது குறித்து சற்று விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

நம் உடலில் இருக்கும் மேல் தோலுக்குப் பிறகு, கல்லீரல் உடலின் இரண்டாவது பெரிய உறுப்பாக உள்ளது. மூளைக்குப் பிறகு, மிகவும் சிக்கலான உறுப்பு என மருத்துவர்களால் சொல்லப்படும் இந்த கல்லீரல், நமது உடல் சரியாக இயங்குவதற்கு தேவையான பல்வேறு செயல்முறைகளுக்கு பொறுப்பாக உள்ளது. கல்லீரலின் எந்தவொரு செயலிழப்பும் குறிப்பிடத்தக்க உடல்நலக் கவலைகளை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக, ஹெபடைடிஸ், கல்லீரல் சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பெரிய நோய்களைத் தவிர்க்க கல்லீரலை முறையாகப் பராமரிப்பது அனைவரின் கடமையாகும்.
 
கல்லீரல் மனித உடலில் உள்ள மிகப்பெரிய திட உறுப்பு ஆகும். இது 500க்கும் மேற்பட்ட பணிகளைச் செய்கிறது. செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரல் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், வளர்சிதை மாற்றம், ஊட்டச்சத்து சேமிப்பு, வெளியேற்றம் மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளை அன்றாடம் செய்து வருகிறது. கல்லீரல் பித்தத்தை சுரக்கிறது. இது லிப்பிடுகளின் செரிமானத்திற்கு உதவும் ஒரு செரிமான திரவமாகும். இரத்த உறைதல் கல்லீரலால் கட்டுப்படுத்தப்படுகிறது. மருந்துகள் மற்றும் பிற நச்சுப் பொருட்களை உடல் சுழற்சியில் இருந்து அகற்ற இந்த கல்லீரல் உதவுகிறது. நோய்க்கிருமிகளை சுழற்சியில் இருந்து நீக்குவதன் மூலம், உடலை நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் பெரும் பங்கை இந்த கல்லீரல் செய்து வருகிறது. உடல் முழுவதும் லிப்பிடுகளை கொண்டு செல்ல உதவும் கொழுப்பு மற்றும் சிறப்பு புரதங்களை உருவாக்குகிறது. 

இத்தகைய முக்கிய உறுப்பான கல்லீரலை கெடுக்கும் விதத்தில் இன்றைய இளைஞர்கள் மது குடிப்பதன் மூலம் பாதிப்படையச் செய்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் கல்லீரல் தொடர்புடைய  நோயினால் பாதிக்கப்படுபவர்களது எண்ணிக்கை 5 பேரில் ஒருவரும், இந்திய அளவில் 40 சதவீதம் பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் தமிழகத்தில் 30 சதவீதம் பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கல்லீரலை கவனித்துக்கொள்வதும், அதன் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் தொடர்ந்து பரிசோதனை செய்வதும் முக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

உலக அளவில் கல்லீரல் பாதிப்பால் உயிரிழப்புகள் எண்ணிக்கை 20 லட்சம் பேர் இருப்பதாகவும் வரும் 2030ம் ஆண்டிற்குள் இது 35 லட்சம் உயிரிழப்புகளாக அதிகரிக்கக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆகையால் 500க்கும் மேற்பட்ட செயல்களை செய்யும் முக்கியமான உறுப்பாக இருக்கக் கூடிய கல்லீரலை பாதுகாக்கும் விதமாக, நாம் நல்ல நிலையில் அதனை பராமரிக்க வேண்டும். சீரான உணவை உட்கொள்ள வேண்டும். பழங்கள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், ஆகியவை சீரான உணவின் முக்கிய பகுதிகளாக உள்ளது. அதேபோன்று உடலை நீரேற்றமாக வைத்திருக்க குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் அதாவது 8 குவளை தண்ணீர் குடிப்பது அவசியமாகும். கல்லீரல் தன் வேலைகளை எளிதாக செய்ய இந்த தண்ணீர் பெரும் பங்காற்றுகிறது. பல 100 வேலைகளை நாள்தோறும் நம் உடலில் சோர்வின்றி செய்யும் நம் கல்லீரலை அனுதினமும் பாதுகாப்பது நம் கடமையே...

Night
Day