அங்கு போ.. இங்கு போ.." அலைக்கழித்த அரசு மருத்துவர்.. வசைபாடிய நோயாளி...

எழுத்தின் அளவு: அ+ அ-

பூச்சிக் கடிக்கு தடுப்பூசி போட வந்த விவசாயியை, "அங்கு போ இங்கு போ" என அரசு மருத்துவமனை மருத்துவர் அலைக்கழித்து உயிரோடு விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர், அரசு மருத்துவர்களை பேய் மருத்துவர் என வசைபாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆணைமலையன் பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஜெயக்குமார். இவர், விவசாய பணியின் போது பிறப்புறுப்பில் ஏதோ பூச்சி ஒன்று கடித்துள்ளது. வலியால் துடித்து போன அவர், முதலுதவி சிகிச்சைக்காக இராயப்பன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுள்ளார். மேலும், மேல் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு வலி தாங்க முடியாமல் இருந்த ஜெயக்குமாரை மருத்துவர்கள் "அங்கு போ இங்கு போ" என அலைக்கழித்துள்ளனர். இறுதியாக ஆண் மருத்துவரை அணுகிய ஜெயக்குமார் நடந்தவற்றை கூறியுள்ளார். அனைத்தையும் பொறுமையாக கவனித்த, மருத்துவர் பரிசோதனை எதும் செய்யாமல் இன்று அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு மட்டும் தான் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அலட்சியமாக கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த ஜெயக்குமார் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர்களின் செயலால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு நிகழ்ந்த துயரங்கள் அனைத்தையும் விவரித்த அவர், நோயாளிகளை தாய் தந்தையை போல் பாவித்து கவனிக்கும் மருத்துவர்கள் கடவுள் என்றும், தன்னை அலைக்கழித்த மருத்துவர்கள் பேய் என்றும் வசைபாடியுள்ளார்.

அரசு மருத்துவர்களின் அலட்சிய போக்கால் மனமுடைந்த நோயாளி தான் பட்ட வேதனைகளை வீடியோவாக பேசி வெளியிட்ட நிலையில், அரசு மருத்துவர்களின் மெத்தன போக்கிற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று அலட்சியமாக செயல்படும் மருத்துவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.. 

Night
Day