4 வது நாளாக பற்றி எரியும் குப்பை கிடங்கு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் 4வது நாளாக கொளுந்துவிட்டு எரிந்து வரும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். 

ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் நாள்தோறும் சுமார் 200 டன் குப்பைகள் சேகரித்து வைக்கப்படுகின்றன. இந்த குப்பை கிடங்கில் கடந்த 16ம் தேதி மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. தகவலறிந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். 

குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கரும் புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளதால், குடியிருப்புவாசிகள் மூச்சு திணறல் உள்ளிட்ட உபாதைகளை சந்தித்து வருகின்றனர். அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணி 4வது நாளாக தொடர்வதால் அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவியை வழங்கி வருகின்றனர். 

Night
Day