ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழக அரசின் மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 55 நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு அந்நாட்டு சிறையில் அமைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் ஆலோசனை நடத்திய மீனவர்கள் 61 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். இலங்கை அரசு மீனவர்களை விடுதலை செய்வதில் கால தாமதம் செய்யும் பட்சத்தில் வரும் 13ம் தேதி தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அதனைத் தொடர்ந்து 15ம் தேதி சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தவும், வரும் 19ம் தேதி குடும்பத்தினருடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூட்டத்தில் முடிவெடுத்தனர். 

அதன்படி, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாள்தோறும் சுமார் ரூபாய் ஒரு கோடி வரை அந்நிய செலாவணி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Night
Day