எழுத்தின் அளவு: அ+ அ- அ
மத்தியபிரதேசத்தைத் தொடர்ந்து, மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்கள் தேர்வு எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக் கூறி, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, சாய் ப்ரியா, ஹரிஹரன், அக்ஷயா உள்ளிட்ட 13 மாணவ, மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், மின் தடை காரணமாக குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச் சிதறல்கள் காரணமாக திறமையாக தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தெரித்தனர். இதற்காக கூடுதல் நேரமும் ஒதுக்கப்படவில்லை என்றும், தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், மின் தடை ஏற்பட்டதா? என்பது குறித்தும், மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பது குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என தடை விதித்து விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். முன்னதாக இதேபோன்ற மின்தடை தொடர்பான வழக்கில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மத்தியபிரதேச உயர் நீதிமன்றமும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.