பள்ளி அருகே தனியார் மதுக்கடை - நீதிமன்றம் எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் செக்கானூரணி கிராமத்தில் அரசு பள்ளி அருகே அமையவுள்ள தனியார் மதுக்கடைக்கு தடைவிதிக்க உத்தரவிட கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை செக்கானூரணி கிராமத்தில் அரசு பள்ளி அருகே புதிதாக அமைய உள்ள தனியார் மதுக்கடைக்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தனியார் மது கடைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அரசு தரப்பு நீதிமன்றத்தில் இவ்வாறு கூறிவிட்டு பின்பு அனுமதி வழங்கிவிடுவார்கள் என்றும் எனவே அனுமதி வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். அதற்கு மாவட்ட நிர்வாகம் மதுகடைக்கு அனுமதி வழங்கவில்லை என நீதிமன்றத்தில் கூறியதை மீறி அனுமதி வழங்கினால் அதனை இடிக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Night
Day