தொழிலாளர் பெருமக்‍களுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா 'மே தின' வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

உழைப்பே ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மே தின நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ளா மே தின வாழ்த்துச் செய்தியில், உழைப்பின் மேன்மையினையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த "மே தின" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்நாள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாகக் கொண்டாடப்படுகிறது - மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய தொழிலாளர்கள், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்பதனை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே, 'தொழிலாளர் தினமாக' உலகெங்கும் கொண்டாடப்படுகிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., "உழைப்பவரே உயர்ந்தவர்" என்றுதான் எழுதி கையெழுத்து போடுவார் - அதற்கு மிக முக்கிய காரணம் அவர் உழைப்பின் வலிமையை அறிந்தவர் - திரைப்படத்துறையில் நடித்த போதே  உழைக்கும் வர்க்கத்தின் பெருமைகளை எடுத்து சொல்லும் விதமாக, புரட்சித்தலைவர், தான் நடித்த படங்களில் உள்ள பாடல்கள், கதாபாத்திரங்கள் மூலம் உழைப்பவர்களின் பெருமைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர் -

அதேபோன்று உழைப்பாளர்களுக்குள் உயர்வு, தாழ்வு இல்லை; அவர்களிடையே வேறுபாடு இல்லை; உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே என்பதை புரட்சித் தலைவர்,

"ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே!
உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!"

என்ற பாடலின் மூலம் உழைப்பின் மாண்பினையும், உழைப்பாளர்களின் பெருமையையும் வெளிப்படுத்தியவர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவர், திரைப்படங்களில் பாடியதோடு இருந்துவிடாமல் தமிழக முதல்வராக பதவியில் அமர்ந்தவுடன், உழைப்பாளர்கள் மேன்மை அடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அவர்கள் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றினார் -

அதிலும் குறிப்பாக, 1984ஆம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களது வாரிசுகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஈரோட்டில் சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி புரட்சித்தலைவரால் நிறுவப்பட்டதையும், அதேபோன்று புரட்சித்தலைவி அம்மாவினால் 1992-ஆம் ஆண்டு ஐ.ஆர்.டி.டி. மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டதையும் இந்நன்னாளில் பெருமிதத்துடன் எண்ணிப்பார்க்கிறேன் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

மேலும், நம் அம்மாவும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியதையும், உழைக்கும் வர்க்கத்தினர் என்றென்றும் நினைவில் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day