டாஸ்மாக் பொது மேலாளர், துணை மேலாளருக்கு ED சம்மன்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், டாஸ்மாக் பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 16ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, எம்.ஆர்.சி நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உட்பட 12 இடங்களில் 2 நாட்களாக சோதனை நடத்தி அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. 

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், தொழிலதிபர் தேவக்குமார், மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் ஆகியோரையும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, 19ம் தேதி காலை 11 மணிக்கு ஜோதி சங்கர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மதுபான ஒப்பந்தங்கள், காலி பாட்டில்கள் விற்பனை, வரவு செலவு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதேபோல், முன்னாள் மேலாளர் சுமனிடமும் விசாரணை நடைபெற்றது. 

இந்நிலையில் டாஸ்மாக் பொதுமேலாளர் சங்கீதா மற்றும் துணை பொதுமேலாளர் கெளரி சங்கர் ஆகியோரை மீண்டும் விசாரணைக்கு டாஸ்மாக் அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Night
Day