எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் வரும் 14ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. மேலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
இதேபோல் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
வரும் 14ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ள வானிலை மையம், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.