ஆவின் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா அறிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளதன் மூலம் நாட்டு மக்களின் மீதுள்ள சுமை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளநிலையில், ஆவின் பால் பொருட்களின் விலையை விளம்பர திமுக அரசு குறைக்காமல் விற்பனை செய்வதற்கு புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இதுநாள் வரை 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய 4 அடுக்குகளின் கீழ் வரிகள் இருந்தநிலையில், தற்போது இதனை 4 அடுக்கில் இருந்து 2 அடுக்குகளாக அதாவது 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என திருத்தம் செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களின் மீதுள்ள சுமை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் சமையலறைப் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள், விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆட்டோ மொபைல்கள் வரை பல பொருட்களின் விலையானது குறைந்துள்ளது - குறிப்பாக, நெய், பனீர், வெண்ணெய், பிரெட் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலையும், டிவி, ஏசி, வாஷிங் மெஷின்கள் போன்ற பல வீட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். அதேபோன்று தினசரி பயன்பாட்டுப் பொருட்களான ஹேர் ஆயில், டாய்லெட் சோப், ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்றவற்றின் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துவிட்டன என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளநிலையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை குறைக்காமல், விற்பனை செய்வது மிகவும் கண்டனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக மத்திய அரசு செய்துள்ள வரி சீர்திருத்தத்தால் விலை குறைந்துள்ள ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை, ஏதோ திமுக அரசு விலையை குறைத்தது போன்று தள்ளுபடி விலையில் ஆவின் பால் பொருட்களின் விற்பனை என அறிவித்து இருப்பது தமிழக மக்களை முற்றிலும் ஏமாற்றுகின்ற செயல் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக வெண்ணெய், சீஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலையை குறைக்காமல் நெய், பனீர் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களின் விற்பனை விலையை சலுகை விலையில் வழங்குவது போன்று திமுக அரசு அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

உண்மையில் திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை தள்ளுபடி செய்வதாக இருந்தால் முதலில் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கேற்ப விற்பனை விலையை குறைத்துவிட்டு அதன் பிறகு திமுக அரசு தள்ளுபடி விலையை அறிவிக்க வேண்டும் - அவ்வாறு செய்யாமல் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பை திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை தள்ளுபடி செய்தது போன்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், இதன்மூலம் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் என்ற கூற்று மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மத்திய அரசு செய்துள்ள ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தில் விவசாயத்திற்கு தேவையான உரப்பொருட்களுக்கு 5 சதவீதம் அளவுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருப்பினும், ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முற்றிலுமாக வரிவிலக்கு செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கேற்ப அனைத்து ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையினை உடனே குறைத்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக் கொள்வதாகவும், அவ்வாறு செய்யாமல் காலதாமதம் செய்யும்பட்சத்தில் ஆவின் நிர்வாகத்தின் மீது மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை பொதுமக்கள் முழுமையாக அடையும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப விற்பனையாளர்கள் விற்பனை விலையில் மாற்றம் செய்து சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்களா? என்பதை தொடர்ந்து கண்காணித்திட தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day