எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், 16 வயது சிறுவன் உட்பட 8 பேரை போலீசார கைது செய்துள்ளனர்.
கோவில்பட்டி புதுக்கிராமம் சென்பகா நகரைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சதீஷ் மாதவன் என்பவருக்கும், வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஷ்வரன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வள்ளுவர் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வெளியே வந்த சதீஷ் மாதவன், கடை வாசலில் வைத்து பிரகதீஷ்வரனை பார்த்துள்ளார்.
அப்போது, உடனே தான் மறைந்து வைத்திருந்த அரிவாளால் பிரகதீஷ்வரனை சரமாரியாக வெட்டி விட்டு தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரகதீஷ்வரன் உடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், கொலைச் சம்பவம் நடைபெற்ற 30 நிமிடங்களில் பிரகதீஷ்வரன் ஆதரவு கோஷ்டியினர், புதுக்கிராமம் சென்பகா நகரில் உள்ள சதீஷ் மாதவனின் வீட்டுக்குச் சென்று அவரது அம்மா கஸ்தூரியை வீட்டு வாசலில் வைத்து வெட்டி கொலை செய்தனர். இதை தடுக்க வந்த கஸ்தூரியின் உறவினர் சென்பகராஜ் என்பவரின் கையையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த செண்பக ராஜை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில், போலீசார் 16 வயது சிறுவன் உட்பட 8 பேரை கைது செய்தனர். மேலும், 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.