ஆவடி அருகே சித்த மருத்துவரும், அவரது மனைவியும் கழுத்து அறுத்து படுகொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சித்த மருத்துவரும் அவருடைய மனைவியும் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். மருத்துவம் பார்க்க வந்தது போல் நடத்தப்பட்ட இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு 2வது குறுக்குத் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சிவன் நாயர், வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவருடைய மனைவி பிரசன்னா குமாரி மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், மருத்துவம் பார்க்க வந்தது போல் நேற்றிரவு வந்த மர்மநபர்கள், சிவன் நாயர் மற்றும் பிரசன்னா குமாரியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். 

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி அங்கு வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். நகை பணத்துக்காக இந்த இரட்டை கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதனிடையே, கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட மகேஷ் என்ற நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவம் பார்க்க வந்து சென்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான பல்வேறு அரசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதியில் தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

Night
Day