எழுத்தின் அளவு: அ+ அ- அ
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
அணுஆயுத தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்த நாட்டின்மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரான் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு மூத்த விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் என பலரும் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தீவிர தாக்குதல்களை நடத்தியது.
போர் நிறுத்தத்திற்கான சர்வதேச நாடுகளின் வேண்டுகோள்களை புறக்கணித்து, இரு நாடுகள் இடையே இன்று 4வது நாளாக போர் நீடித்தது. இஸ்ரேலின் பாட் யாம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று இரவு முழுவதும் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்கள் மீது ஏவுகணைகள் பாய்ந்தன.
இதனிடையே, ஈரான் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் மற்றும் மேலும் இரண்டு மூத்த ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இதுவரை 224 பேர் பலியாகி இருப்பதாகவும், ஆயிரத்து 277 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இதுவரை ஈரான் 270 ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவை வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டாலும், அதையும் மீறி 22 ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளைத் தாக்கியதில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் 390 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று நடைபெறுவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக உள்ள நிலையில், நாட்டின் பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா என விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.