எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ஒரு ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது இந்தப் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சென்றார்.
அதனைத்தொடர்ந்து உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் குறித்த கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார். அப்போது காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் ரயில் இணைப்புத் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுடன் பிரதமர் உரையாடினார்.
இதையடுத்து உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் தேசியக் கொடியை அசைக்க ரயில் என்ஜின் ஒன்று அந்த பாலத்தில் வந்தது. அதில் ஏறி பிரதமர் பயணம் மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து நாட்டின் முதல் கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பின்னர், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான இரண்டு வந்தே பாரத் விரைவு ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரயிலில் பயணித்த மாணவ மாணவிகளுடன் பிரதமர் உரையாடினார்.
இதனைத்தொடர்ந்து கத்ராவில் 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.