எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தங்கரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு குடியரசு துணை தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை ஆளுநரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ளார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது. மேலும் மசோதாக்கள் மீதான ஒப்புதல் அல்லது முடிவை வழங்க ஒரு மாத கால அவகாசத்தையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நிர்ணயம் செய்தது.
இந்நிலையில் தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் மாநிலங்களவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், உச்சநீதிமன்றம் சூப்பர் பார்லிமென்ட் போல செயல்படுவதாகவும், குடியரசுத் தலைவரை நீதித்துறை இயக்குவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லியில் குடியரசு துணைத்தலைவரை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.