குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசு தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. 

பல்கலைக் கழக துணை வேந்தவர்கள் நியமனம் உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்காமல் அவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசோதா மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க காலநிர்ணயம் செய்தது. 

மாநில சட்டப்பேரவைகள் அனுப்பு மசோதாக்கள் தொடர்பாக 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும், ஆளுநர்கள் முதல்முறையாக அனுப்பும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும், ஆளுநர் அனுப்பி வைக்கும் மசோதா மீது எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்தால், மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா, சட்டப்பிரிவு 201ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை குடியரசுத் தலைவர் பயன்படுத்தும்போது, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா, குடியரசுத் தலைர் ஒப்புதலுக்காக ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைக்கும் போது, உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெற குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா என்பன உள்ளிட்ட 14 கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை மனுவாக ஏற்றுக் கொண்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, சூர்யகாந்த், விக்ரம்நாத், அதுல் எஸ். சந்துர்கர் ஆகிய 5 பேரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது. 

Night
Day