எழுத்தின் அளவு: அ+ அ- அ
மசோதாக்கள் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 142-ல் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.
அதோடு, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பும் நிர்ணயித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், மசோதாக்கள் மீதான நடவடிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு தானாக குடியரசுத் தலைவருக்கும் பொருந்தியது.இதனால், குடியரசுத் தலைவருக்கு எப்படி உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயிக்க முடியும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் காட்டமாகக் கேள்வியெழுப்பினார்.
இந்த நிலையில், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால வரம்பு நிர்ணயிக்கும் நிபந்தனைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதபோது, உச்ச நீதிமன்றம் எப்படி இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அதன்படி,
பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன என்பது குறுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல ஒரு மசோதா ஆளுநர் முன் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு இருக்கும் அனைத்து அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமை நியாயப்படுத்தக்கதா?, பிரிவு 200-ன் கீழ் ஒரு ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு, பிரிவு 361 ஒரு முழுமையான தடையா போன்ற கேள்விகளையும் குடியரசு தலைவர் முன்வைத்துள்ளார்
அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், சட்டப்பிரிவு 200-ன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்காக, நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு விதிக்கப்பட்டு, செயல்படுத்தும் முறையை பரிந்துரைக்க முடியுமா என திரெளபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயப்படுத்தத்தக்கதா?,
அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா? செயல்படுத்தும் முறை பரிந்துரைக்கப்படுமா? எனவும் குடியரசு தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கும்போது, பிரிவு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறவும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறவும் குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா? என திரெளபதி முர்மு வினவியுள்ளார்.
ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ள குடியரசு தலைவர் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா? எனவும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிவு 145-(3)இன் படி, எந்தவொரு உச்ச நீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா? என வினவியுள்ள குடியரசு தலைவர்,
அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா? என்றும் முரணான உத்தரவுகளை பிறப்பித்தல் மற்றும் ஆணைகளை பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.