எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெங்களூரு சின்னச்சாமி மைதான கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கர்நாடக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள மாநில உயர் நீதிமன்றம், விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஐபிஎல்-ல் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு பெங்களூருவில் நடத்தப்பட்ட பாராட்டு விழா கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்தது. அதேபோல் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை கோரி பல பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இவை அனைத்தும் பொறுப்பு தலைமை நீதிபதி வி.காமேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. கொண்டாடும் நோக்கம் ஒரு சோகத்திற்கு வழிவகுத்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள் சோகத்திற்கான காரணங்களையும், சோகத்தைத் தடுத்திருக்க முடியுமா என்பதையும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காகவும்தான், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சஷிகிரண் ஷெட்டி, இது போன்ற சம்பவங்களை தவிர்க்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருவதாகவும், நீதிமன்றம் எந்த வழிகாட்டுதலை வழங்கினாலும், அதனை செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மனுதாரார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இது ஒரு குற்றவியல் அலட்சியம் என்றும் இவ்வளவு பேரை தங்க வைக்கும் திறன் இல்லாமல், மைதானத்தின் 3 வாயில்கள் மட்டுமே திறக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
ஆர்.சி.பி வீரர்களை பாராட்ட யார் முடிவு எடுத்தார்கள் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நாட்டிற்காக விளையாடாத வீரர்களை பாராட்ட வேண்டிய கடமை என்ன என்றும் பொதுமக்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரியப்படுத்த வேண்டும் என்ற வாதங்களை முன்வைத்தனர். ஐபிஎல் நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்த நிலை அறிக்கையை பதிவு செய்துள்ளதாக கூறிய நீதிபதிகள், வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது யார்? விதான் சவுதா, சின்னசாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன் மற்றும் அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரிக்கப்படும் என அறிவித்தனர்.