எழுத்தின் அளவு: அ+ அ- அ
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம், விடுதி கட்டடம் மீது விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பயணிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.39 மணியளவில் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மெகானி நகரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தால் விண்ணை முட்டும் அளவுக்கு புகைமூட்டம் எழுந்து அப்பகுதியை கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.
விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்த மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு நடவடிக்கையை விரைவுபடுத்தும் வகையில் தேசிய பேரிடர் மீட்புப் படையும் களமிறக்கப்பட்டன. விபத்து நடைபெற்ற இடத்தையொட்டிய சாலைகள் அனைத்தும் சீலிடப்பட்ட நிலையில், அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா போயிங் ரக விமானத்தில் 230 பயணிகள், 2 விமானிகள், மற்றும் 10 விமான பணியாளர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ்காரர்கள், 1 கனடியர் மற்றும் 7 போர்ச்சுக்கீசிய பயணிகள் என்பதும் தெரியவந்துள்ளது. பயணிகளில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 30 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் காயமடைந்திருப்பதாகவும் FAIMA மருத்துவர்கள் சங்கம் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்பட்ட 5 ஐந்து நிமிடங்களுக்குள் இந்த விபத்து ஏற்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஃபைஸ் அகமது கித்வாய் தெரிவித்துள்ளார். தலைமை விமானி கேப்டன் சுமீத் சபர்வால் 8 ஆயிரத்து 200 மணி நேரமும் துணை விமானி கிளைவ் குந்தர் ஆயிரத்து 100 மணி நேரமும் விமானத்தை ஓட்டிய அனுபவம் உள்ளவர்கள் என்றும் விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது. புறப்பட்ட சில வினாடிகளில் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்த நிலையில் அதன் பிறகு ரேடார் தொடர்பில் இருந்து விமானம் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் விமான போக்குவரத்து இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே விமான விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்ய அவர்களை உடனடியாக அகமதாபாத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.