எழுத்தின் அளவு: அ+ அ- அ
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை கண்டித்து, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவிகிதம் வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா மீதான வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்காக ஜூலை மாத இறுதி வரை அவர் காலக்கெடுவும் நிர்ணயித்திருந்தார். இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார். ஒப்பந்தம் ஏற்படாதநிலையில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். இந்தநிலையில், இந்த வரி விதிப்பில் கூடுதலாக 25 சதவீதம் உயர்த்தி உள்ளார் அதிபர் டிரம்ப்.
முதலில் இந்த மாதம் முதல் தேதியில் இருந்து அமலாகும் என அறிவிக்கப்பட்ட இந்த வரிவிதிப்பு பிறகு 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், டிரம்ப் அளித்த பேட்டியில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாததால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த வரியை மேலும் கடுமையாக்கப் போவதாக கூறியிருந்தார். அதன்படி, இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது விதிக்கப்பட்ட வரி மூலம் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.