எழுத்தின் அளவு: அ+ அ- அ
குற்றவாளி ஞானசேகரனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையில் திருப்தியில்லை என்றும், வாழ்நாள் முழுவதும் ஆயுள்தண்டனை வழங்கப்படும் என எதிர்ப்பார்த்ததாக பாதிக்கப்பட்ட மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் குறைப்பில்லாத தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக முதலில் புகார் கொடுத்த வழக்கறிஞர் மரிய ஜலால், ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் திருப்தியில்லை என்றும், வாழ்நாள் முழுவதும் ஆயுள்தண்டனை வழங்கப்படும் என எதிர்ப்பார்த்ததாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காவலர் சீருடையில் வந்து விசாரிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தும், அதனை மீறி 2 காவலர்கள் பல்கலைக்கழகம் உள்ளே வந்து விசாரித்ததாகவும் தெரிவித்தார். மேலும், பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள் கொண்டு வந்த அரசு அது சரிவர செயல்படுகிறதா என்பதை கவனிக்கிறதா என்பது கேள்வி குறியாக உள்ளதாகவும், பெண்களுக்கான அவசர தேவை எண்கள் எதுவும் சம்பவத்தன்று செயல்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.