ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கடலூர் போலீசார் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்தனர். 

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பள்ளி வேன் ஓட்டுநர் கேட்டை திறக்க வலியுறுத்தியதாக தெற்கு ரயில்வே விளக்கமளித்திருந்தது. இதனைத்  தொடர்ந்து விதியை மீறிய ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மாவை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் இயக்க பாதுகாப்பு விதிகளின்படி கேட்டை மூடாமல் பள்ளி வாகனத்தை கடக்க அனுமதித்து விதிகளை மீறியதால் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பங்கஜ் சர்மாவை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்ட இந்த விபத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.   விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டரை லட்சம் வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை ரயில்வே துறை பணியிடை நீக்கம் செய்ததையடுத்து கடலூர் எஸ்பி உத்தரவின் பேரில் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

varient
Night
Day