எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் மனுவாக தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றிய சங்கர் ஜிவால் கடந்த 31-ஆம் தேதிஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து தமிழக காவல்துறையின் நிர்வாக டி.ஜி.பி. வெங்கடராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். அதன்படி நேற்றுமுன்தினம் காவல்துறை தலைமையகத்தில் பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்ற வெங்கடராமனிடம் சங்கர் ஜிவால் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜரான வழக்கறிஞர் வரதராஜ், தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்கக் கூடாது என்றும், அது சட்ட விரோதமானது என்றும் முறையிட்டார். இதனைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இதேபோல் நேற்று வெங்கடராமனை பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து சமூக செயற்பாட்டாளரும் , மனித உரிமை ஆர்வலருமான வழக்கறிஞர் ஹென்ரி திபேன் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.