எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரனை உடனடியாக கைது செய்யக்கோரி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் கழக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
புரட்சித்தலைவி அம்மாவுக்கு எல்லாமாக இருந்து கண்ணை இமை காப்பது போல புரட்சித்தாய் சின்னம்மா காத்து வந்தார். தனக்கு பிறகும் 100 ஆண்டுகளுக்கு அஇஅதிமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அயராது உழைத்துக்கொண்டிருக்கும் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து எந்த ஒரு தகுதியும், தராதரமும் இல்லாத திமுக முன்னாள் மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், அவதூறாக பேசியிருப்பது கோடிக்கணக்கான அஇஅதிமுக தொண்டர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
குடியாத்தம் குமரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது கழகத் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது youtube சேனலை முடக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
புரட்சித்தாய் சின்னம்மா குறித்து செவி கொடுத்து கேட்கமுடியாத அளவில் தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரனை கைது செய்ய வலியுறுத்தி, கழக நிர்வாகி கோபால் தலைமையில், நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். குடியாத்தம் குமரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.