புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவு நாள் - டிச.24-ல் புரட்சித்தாய் சின்னம்மா அஞ்சலி செலுத்துகிறார்

எழுத்தின் அளவு: அ+ அ-

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 38-ஆம் ஆண்டு நினைவு நாளான வரும் 24ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள புரட்சித்தலைவரின் நினைவிடத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் நலனுக்காகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிடவும், எண்ணற்ற திட்டங்களை வகுத்துக் கொடுத்த, சத்துணவு தந்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., உலகத்தமிழர்கள் ஒவ்வொருவரின் நெஞ்சங்களிலும் நீங்காது, இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கைகளை மனதில் வைத்து, அவர்கள் காட்டிய அதே பாதையில் தொடர்ந்து பயணிக்க, அவர்களது 38-ஆம் ஆண்டு நினைவு நாளான வரும் 24ம் தேதி புதன்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத் தொண்டர்களோடு இணைந்து, மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான அன்பு உடன்பிறப்புகளும், புரட்சித்தலைவியின் வழியில் பயணிக்கும் கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், புரட்சித்தலைவரின் மன்றத்தில் களப்பணியாற்றுகின்ற கோடானு கோடி ரசிகப் பெருமக்களும், இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களும், ஜாதி மத பேதமின்றி, அன்புக்குரிய ஆசான் புரட்சித்தலைவர் அவர்களின் சீடர்களாக, ஒற்றுமையாக இணைந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day