பாமகவில் உச்சக்கட்ட பரபரப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் ஆணையமே தன்னை பாமக தலைவராக அறிவித்துள்ளதால் கட்சி நிர்வாகிகளை நீக்‍கும் அதிகாரம் ராமதாசுக்‍கு இல்லை என அன்புமணி அறிவித்துள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் முற்றி வருவது, கட்சி தொண்டர்களை கவலையடைய செய்துள்ளது.

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது சரமாரியாக குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் தேவைப்பட்டால் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்தே நீக்குவேன் என்றும் எச்சரித்திருந்தார்.

இதனையடுத்து, பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்க அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்தார்.

இந்த பரபரப்பான சூழலில், தைலாபுரத்தில் ராமதாசும், சென்னை சோழிங்கநல்லுரில் அன்புமணியும் தனித்தனியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினர். 

ஆனால், சென்னை சோழிங்கநல்லுரில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்தான் பெரும்பலான பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி, பொதுக்குழுவில் நீங்கள் தான் தன்னை தலைவராக தேர்வு செய்தீர்கள் என்றும், கட்சியில் அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

தொண்டர்கள் இல்லாமல் பாமக என்ற கட்சி இல்லை என்று கூறிய அவர், பதவிகள், பொறுப்புகள் வரும் போகும் என்றும் ஆனால் உங்களின் அன்பு மட்டுமே நிரந்தரம் என்றும் கூறி உள்ளார். அத்துடன் தேர்தல் ஆணையத்தால் பாமக தலைவராக தானே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதனிடையே, தைலாபுரத்தில் நடந்த கூட்டத்தில் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்ட பாமக பொருளாளர் திலகபாமாவை பொறுப்பில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். அவருக்கு பதிலாக சையத் மன்சூரை கட்சி பொருளாளராக நியமித்தார். . இதே போன்று அன்புமணி ஆதரவாளரான விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரான மயிலம்  சிவகுமாரையும் ராமதாஸ் நீக்‍கி விட்டார். அவருக்‍கு பதிலாக புகழேந்தி என்பவரை நியமித்துள்ளார். 

கழக நிர்வாகிகள் நீக்கம் தொடர்பான ராமதாசின் அறிவிப்புகளுக்‍கு எதிராக அன்புமணி பதில் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி பொதுக்‍குழுவால் தேர்வு செய்யப்பட்ட திலகபாமா பாமக பொருளாளராக தொடருவார் என அறிவித்துள்ளார். 

ராமதாசின் அறிவிப்புகளுக்‍கு நேர் மாறாக அறிவித்துள்ள அன்புமணி, பாமக தலைவரான தனக்‍கே கட்சியில் நிர்வாகிகளை நியமிக்‍கவோ, நீக்‍கவோ முழு அதிகாரம் உள்ளதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

ராமதாஸ் நேற்று குற்றம்சாட்டியதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தாம் பாட்டிலை தனது தாய் சரசுவதி மீது வீசவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த உலகில் தனக்‍கு மிகவும் பிடித்தவர் அம்மாதான் என்றும் அவர் மீது சிறு துரும்பு கூட பட விட மாட்டேன் என கூறினார். தந்தை, மகன் இடையே எழுந்துள்ள அதிகார போட்டியால் பாமக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பாமக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணி பொருளாளராக நியமித்துள்ளதால் பதவியில் தொடர்வேன் என திலகபாமா தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் அன்புமணி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை நீக்குவதாக அறிவித்த ராமதாஸ் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.


Night
Day