எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதாகவும், விபத்துகள் நடக்கக்கூடிய பகுதியாகவும் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் பல முறை காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் போக்குவரத்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக பேப்பர் மில்ஸ் சாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் போக்குவரத்து காவல்துறையினர் வருவதே கிடையாது எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், குறுகலான சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே பெரம்பூர் சம்பவத்தின் எதிரொலியாக சென்னை மாநகரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகள் உள்பட மாநகர பகுதிகளில் காலை 7 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இதனை மீறினால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் கனரக வாகனங்களை குறைந்தது 100 நாட்களுக்கு ஒப்படைக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.