எழுத்தின் அளவு: அ+ அ- அ
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்துகளால் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது பற்றி துளியும் கவலைப்படாத இந்த விளம்பர அரசுக்கு புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் நான்கு அறைகள் முற்றிலும் தரைமட்டமானதில் 8 தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளால் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது பற்றி துளியும் கவலைப்படாத இந்த விளம்பர அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல், விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளால் சுமார் 75க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்துள்ளதாகவும், 140-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும், இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன - திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். தனியார் பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததுமே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக செய்திகள் தெரிவிக்கின்றன - பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு முறையான ஆய்வுகள் எதையும் செய்வதில்லை என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் நாக்பூர், சென்னை மற்றும் டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற ஆயிரத்து எண்பது பட்டாசு ஆலைகள் இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவி அம்மா 2011ஆம் ஆண்டு பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டாசு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்ததாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் திமுக தலைமையிலான ஆட்சியில் அதற்கு போதிய அலுவலர்கள் நியமிக்கப்படாததால் தற்போது இந்த பயிற்சி மையம் செயல்பாடு இன்றி காட்சி பொருளாகவே இருந்து வருகிறது என்றும், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும் அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து நடைபெறாத நாட்களே இல்லை என்றளவுக்கு தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு, அதில் ஏதும் அறியாத அப்பாவி தொழிலாளர்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். திமுக தலைமையிலான அரசு மக்கள் படும் துன்பங்களை வேடிக்கை பார்ப்பதைத்தவிர அவர்களுக்கு தேவையான எந்தவித பாதுகாப்பையும், எந்நாளும் அளிக்க போவது இல்லை என்றும், இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.